– நமது நிருபர் –
கட்சிக்காக களப்பணியாற்றிய மாநில நிர்வாகிகள் பலருக்கு, ‘சீட்’ மறுக்கப்பட்ட நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில், காங்கிரசை சேர்ந்த ஜோதிமணிக்கு, திருமாவளவன் ‘சீட்’ கொடுத்துள்ளது, அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை ஒதுக்கும்படி, வி.சி., தலைவர் திருமாவளவன் போராடி வந்தார். ஆனால், தி.மு.க., எட்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியது. இதனால், தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சீட்டுக்காக காத்திருந்த மாநில நிர்வாகிகள் பலருக்கு, திருமாவளவன் வாய்ப்பு தரவில்லை. அதேநேரம், அவரது அக்கா மகள் மாலதிக்கு வாய்ப்பு தந்துள்ளார்.
மேலும் காட்டுமன்னார்கோவிலில், திருமாவளவன் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். இதனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர், திருமாவளவனுடனான தொடர்பை துண்டித்தனர். அவர்களுடன் தொடர்ந்து சமரச பேச்சு நடத்தி வருகிறார். இதற்கிடையே, தானே போட்டியிடுவதாக இருந்த காட்டுமன்னார்கோவில் தொகுதியில், காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி என்பவர், வி.சி., சார்பில் போட்டியிட, திருமாவளவன் வாய்ப்பு தந்துள்ளார்.
வி.சி., நிர்வாகிகள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், மாற்று கட்சியை சேர்ந்த நபருக்கு, வி.சி.,யில் வாய்ப்பு தரப்பட்டிருப்பது, அக்கட்சியினரிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, வி.சி., நிர்வாகிகள் கூறுகையில், ”திருமாவளவனை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர். அதனால் தான், கட்சிக்காக உழைத்து வருபவர்களை விட்டுவிட்டு, மாற்று கட்சியினருக்கு இடங்களை தருகிறார். குறிப்பாக, பணப்பலம் உடையவர்களுக்கு தான், மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது,” என்றனர்.
