புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு முடியும் முன்னரே, 30 தொகுதிகளுக்கும் திமுகவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கி விட்டனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.9ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை மார்ச் 23ம் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. ஆனால் முதல் இரண்டு நாட்களில் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யவில்லை.
இந் நிலையில் 30 தொகுதிகளிலும் திமுகவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணிகளில் இறங்கி இருக்கின்றனர். இத்தனைக்கும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தாலும், அக்கட்சியுடன் தொகுதி பங்கீடு இன்னமும் நிறைவு பெறவில்லை. தொகுதி பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.
ஆனாலும், 30 தொகுதிகளிலும் திமுகவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாட்கள் குறைவாக உள்ளதே இதற்கு காரணம். இதுகுறித்து பேசிய திமுகவினர், இன்று நல்ல நாள் என்பதால் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளோம், பின்னர் தலைமையின் உத்தரவின் பேரில் தொகுதிகள் இறுதியான பின்னர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுவிடும் என கூறினர்.
