காந்தியுடன் மோதும் 3 திமுக புள்ளிகள்; எஸ்கேப் ஆன எஸ்.எம்.சுகுமார் | ராணிப்பேட்டை தேர்தல் களம் என்ன? | three dmk persons clash with minister gandhi – what is the election scenario in ranipet?

முந்துவது யார்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?”

ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. நான்கிலும் தி.மு.க – அ.தி.மு.க கூட்டணி மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கின்றன.

அதே சமயம், சீட் எதிர்பார்த்து முட்டிக்கொள்ளும் நிர்வாகிகளால் இரண்டு கூட்டணிகளிலுமே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. தற்போதைய களச் சூழலில், நான்கு தொகுதிகளிலும் யார் முந்துகிறார்கள்? வெற்றி வாய்ப்பு எந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

அரக்கோணம் (தனி) சட்டமன்றத் தொகுதி

அரக்கோணம் தனித் தொகுதியில் 1,99,165 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாகத் தொடர்கிறார்.

வரும் தேர்தலிலும், அ.தி.மு.க சார்பாக சு.ரவியே மீண்டும் அரக்கோணத்தில் களமிறங்குகிறார். வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னதாகவே, வாக்குசேகரிப்பிலும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் சிட்டிங் எம்.எல்.ஏ-வான சு.ரவி.

சு.ரவி - பவானி வடிவேலு

சு.ரவி – பவானி வடிவேலு

தி.மு.க சார்பாக நெமிலி ஒன்றியச் சேர்மனும், தி.மு.க ஒன்றியச் செயலாளருமான பெ.வடிவேலுவின் மனைவி பவானிக்கு சீட் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

அரக்கோணம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தி.மு.க-வைச் சேர்ந்த பவானி வடிவேலு உட்பட 48 பேர் தி.மு.க தலைமையில் விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. அப்போது, `வி.சி.க-வுக்கு அரக்கோணம் தொகுதியைக் கொடுக்கக்கூடாது. கூட்டணிக்கு கொடுப்பதால் அ.தி.மு.க-வுக்கு வெற்றி சாதமாகி விடுகிறது. உதயச்சூரியன் சின்னத்தில் நமது வேட்பாளரைக் களமிறக்கினால் மட்டுமே தொகுதியில் வெற்றிபெற முடியும்’ என தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் 48 பேரும் கூட்டாக தெரிவித்திருக்கின்றனர்.

முடிவாக, பவானி வடிவேலுவின் பெயருக்கு நேராக `ஓகே’ என `டிக்’ அடித்திருக்கிறாராம் ஸ்டாலின் என்கிறார் அறிவாலய வட்டாரத்க்தில்.

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி

`திருக்கடிகை’ எனும் சோளிங்கர் தொகுதியில், மொத்தம் 2,56,118 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.முனிரத்தினம் இருக்கிறார். கடந்த 1989, 1991, 1996 மற்றும் 2021 ஆகிய நான்கு சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று, சோளிங்கர் தொகுதியில் நான்காவது முறையாக எம்.எல்.ஏ-வாக வலம் வந்துகொண்டிருக்கிறார் முனிரத்தினம்.

அதேபோல, 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டு இருமுறை தோல்வியடைந்திருக்கிறார் முனிரத்தினம். இதில் சுவாரஸ்யம் என்னவெனில், 2011 தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி சீட் கொடுக்காததால் `காஸ்’ சின்னத்தில் சுயேட்சையாகக் களமிறங்கி தோல்வியடைந்தார்.

கடந்த 2021 தேர்தலின்போதும், முதலில் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால், காங்கிரஸில் இருந்து விலகி தி.மு.க-வில் இணையப் போவதாக பேட்டி கொடுத்து பரபரப்பைக் கூட்டினார். இதையடுத்து, முனிரத்தினத்துக்கே சீட் வழங்கப்பட்டு சமரசம் செய்யப்பட்டது.

Source link