புதுடில்லி: இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய சுயசரிதை புத்தகம் குறித்த காரசார விவாதங்களுடன், பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் முடிந்தது. இரண்டாம் கட்ட அமர்வு, அடுத்த மாதம் 9ல் துவங்கி ஏப்., 2 வரை நடக்கிறது.
ஜனா திபதி திரவுபதி முர்மு உரையுடன், பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன., 28ல் துவங்கியது. தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.,க்கள் பேசினர்.
காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதிய, இதுவரை வெளியிடப்படாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை மேற்கோள்காட்டி பேசினார்.
இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது துவங்கிய அமளி, முதல் அமர்வின் கடைசி நாளான நேற்று வரை தொடர்ந்தது.
சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீசை கொண்டு வந்துள்ளனர். இது, மார்ச் 9ல் துவங்கும் இரண்டாம் கட்ட அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும். அதுவரை சபைக்கு வருவதில்லை என்ற முடிவை சபாநாயகர் ஓம் பிர்லா எடுத்துள்ளார்.
முதல் அமர்வில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அலுவல்கள் சரியாக நடக்கவில்லை. பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ராகுல், மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை எம்.பி., பதவியில் இருந்து நீக்க பா.ஜ., சிறப்பு தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது. இந்த அமர்வில், தொழில் துறை உறவுகள் திருத்த சட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.
முதல் அமர்வின் கடைசி நாளான நேற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். மூன்று வார இடைவெளிக்கு பின், மார்ச் 9ல், இரண்டாம் கட்ட அமர்வு துவங்குகிறது.
