காரில் எரிந்து கிடந்த 4 உட@கள் -திசையன்விளை சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் பகுதியிலிருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையின் ஓரத்தில் சொகுசு கார் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர் மக்கள் நேற்று போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திசையன்விளை போலீசார் மற்றும் வள்ளியூர் டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான குழுவினர் காரை ஆய்வு செய்தனர்.

அப்போது, அதில் நான்கு பேரின் உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் இது திட்டமிட்ட கொலையா? அல்லது கார் தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்து நடைபெற்ற விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியது. உயிரிழந்தவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தினர் என்பதும், கடன் பிரச்சனையால் தத்தளித்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று ஆற்றங்கரை பள்ளிவாசலில் வழிபாடு நடத்திச் சென்றதும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் உறுதியாகி உள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நான்கு உடல்களுக்கும் பிரேதப் பரிசோதனை முடிந்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கைப்படி முஹம்மது ரபீக் மற்றும் அவரது 12 வயது மகனின் உடல் மிக மோசமாக எரிந்துள்ளது. அதனால் அவர்களின் உடல்களை பரிசோதனை செய்வது சவாலாக இருந்துள்ளது. ஆனால் ரபீக்கின் மனைவி நஸ்ரின் பாத்திமா மற்றும் 15 வயது மகள் உடல்களை பரிசோதித்ததில் அவர்கள் விஷம் அருந்தியதற்கான தடயங்கள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடன் தொல்லையால் நிகழ்ந்த திட்டமிட்ட தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். தற்போது நான்கு பேரின் உடல்களும் நஸ்ரின் பாத்திமாவின் சொந்த ஊரான ஆழ்வார் திருநகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Source link