காலிஸ்தான் பயங்கரவாதி மீது கொலை முயற்சி: கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

நியூயார்க்: அமெரிக்காவில், காலிஸ்தான் பயங்கரவாதியை கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காலிஸ்தான் அமைப்பு, இந்தியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க மற்றும் வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்றுள்ள, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வரும் குர்பத்வந்த் சிங் பன்னுானின் ‘சீக்கியர்களுக்கு நீதி’ என்ற அமைப்பு, காலிஸ்தானுக்கு ஆதரவாக இயங்கி வருகிறது.

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த, 2023ல், அமெரிக்காவில் பன்னுானை கொலை செய்ய முயற்சி நடந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த, எப்.பி.ஐ., எனப்படும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு, இந்தியரான நிகில் குப்தா, 54, மீது குற்றம் சாட்டியது.

அவர் இந்தக் கொலையைச் செய்ய ஒரு கூலிப்படையைத் தொடர்பு கொண்டு 90 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசியதாக எப்.பி.ஐ., தெரிவித்தது.

இதையடுத்து, ஐரோப்பிய நாடான செக் குடியரசில் தங்கியிருந்த நிகில் குப்தா கைது செய்யப்பட்டு, 2024ல் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். ‘கைதானவர், குற்ற பின்னணி கொண்டவர் என்றும், இந்த சதிக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

மான்ஹாட்டன் நீதிமன்றத்தில், இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிகில் குப்தா, கொலைக்கு ஏற்பாடு, சதி, கொலை செய்ய பணம் கொடுத்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்.

Source link