புதுடில்லி: ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழகத்தின் இரு வீராங்கனைகள் இடம் பிடித்தனர்.
ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், மார்ச் 1-26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக, தகுதிச்சுற்றில் அசத்தி, இத்தொடருக்கு தகுதி பெற்றது.
‘சி’ பிரிவில், 2011ல் உலக கோப்பை வென்ற, 2014, 2018ல் ஆசிய சாம்பியன் ஆன உலகின் ‘நம்பர்-8’ ஜப்பான், வியட்நாம் (37), சீன தைபே (42) என வலுவான அணிகளுடன் இந்தியா, இடம் பெற்றுள்ளது.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வியட்நாம் (மார்ச் 4) அணியை சந்திக்க உள்ளது. இதற்கான 26 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.
கடந்த 2022ல் சொந்தமண்ணில் நடந்த தொடரில் பங்கேற்ற 8 வீராங்கனைகள் இதில் இடம் பெற்றனர். தவிர 6 பேர் அறிமுக வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து, கோல் கீப்பர் சவுமியா, முன்கள வீராங்கனை காவியா என இருவர் இடம் பிடித்தனர். தவிர முன்களத்தில் கிரேஸ், லிண்டா கோம், மணிஷா, பியாரி என அனுபவ வீராங்கனைகள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சரிதா, நிர்மலா தேவி, ஸ்வீட்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
