புதுடில்லி: காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இந்தியாவுக்கு வந்து உள்ளார். அவர் டில்லியில் நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி-பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்த்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.
பின்னர் பிரேசில் அதிபர் கூறுகையில், ‘காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை பிரேசில் வன்மையாகக் கண்டிக்கிறது; பயங்கரவாதம் என்பது எந்த ஒரு மதத்துடனோ, நாட்டுடனோ தொடர்புடையது அல்ல’ என்றார். அதிபர் லூலாவின் தலைமையின் கீழ் இந்தியா-பிரேசில் உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
