வாஷிங்டன்: ‘‘அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கியூபாவுக்கு பொறுப்பாளராக இருப்பார்” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கியூபாவில் உள்ள கம்யூனிஸ்ட் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா ஏற்கனவே பொருளாதார தடைகளை கடுமையாக்கி வருகிறது. எரிபொருள் ஏற்றுமதி தடை காரணமாக அந்நாட்டில் பெரும் மின்வெட்டு நிலவுகிறது. இந்த சூழலில் , ”ஈரான் போரை முழுமையாக முடித்த பின், கியூபா மீது கவனம் செலுத்தப்படும். பல அற்புதமான மக்கள் அந்நாட்டுக்கு திரும்பி செல்லும் நிலை வரும் ,” என, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் கியூபா மக்கள் உள்ளனர். இது தொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டி: கியூபா விரைவில் வீழ்ச்சி அடைய போகிறது. கியூபாவை நான் 50 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.
ஈரானுக்கு எதிரான போரை அடுத்து கியூபாவுக்கான திட்டம் ஒன்றில் கவனம் செலுத்த இருக்கிறேன். கியூபா அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தீவிரமாக செயல்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கியூபாவுக்கு பொறுப்பாளராக இருப்பார். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
தடை
ஏற்கனவே கியூபா மீது அதிபர் டிரம்ப் எரிசக்தித் தடை ஒன்றை விதித்தார். நடப்பாண்டு ஜனவரி 9ம் தேதியிலிருந்து கியூபாவுக்கு எந்த எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படவில்லை. அதன் விளைவாக விமானச் சேவைகள் ரத்தாகின, விமான நிறுவனங்கள் முடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
