'கிராப்ட்' பேப்பருக்கு தட்டுப்பாடு சிக்கலில் அட்டைப்பெட்டி தொழில்

திருப்பூர்: ‘கிராப்ட்’ பேப்பர் விலை, ஒரு டன்னுக்கு, 4,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், அட்டைப்பெட்டி தயாரிப்பு தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதி வர்த்தகத்திலும், உள்நாட்டு விற்பனையிலும் பொருட்கள் அட்டைப்பெட்டியில் வைத்து பண்டல்களாக அனுப்பி வைக்கப்படுகின்றன.

அட்டைப்பெட்டி தயாரிப்பில், ‘கிராப்ட்’ பேப்பர் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து பேப்பர் வேஸ்ட் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போதைய போர் சூழலால், கப்பல் போக்குவரத்து மூன்று வாரங்களாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘பேப்பர் வேஸ்ட்’ இறக்குமதி முடங்கியுள்ளது.

கடும் தட்டுப்பாட்டால், அட்டைப்பெட்டி விலை, மூன்று வாரங்களில் நான்கு முறை உயர்ந்துள்ளது. ரசாயனம், நிலக்கரி மற்றும் ‘கிராப்ட்’ பேப்பர் என, மூலப்பொருட்கள் விலை உயர்வால், அட்டைப்பெட்டி தயாரிப்பு வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘கிராப்ட் பேப்பர் விலை, டன்னுக்கு, 4,000 ரூபாய் உயர்ந்து, ஒரு டன், 32,000 முதல் 55,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தட்டுப்பாடு நிலவுவதால், மேலும் விலை உயரும் என்கின்றனர்.

கடும் விலை உயர்வை சமாளிக்க முடியாமல், தயாரிப்பை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

Source link