கிரேட்டர் நொய்டா: ‘ வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்கள் மிகவும் அவசியம்,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி, வட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் மோடி பேசியதாவது:
வட இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை, இந்தியாவின் ஹச்சிஎல் குழுமம் மற்றும் தைவானின் பாக்ஸ்கான் ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் திட்டமாகும். இதற்காக இந்தியா சிப் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.3,700 கோடி மதிப்பீட்டில் இந்த ஆலை அமைய உள்ளது.
மாதம் 20,000 சிலிக்கான் வேபர்களை கையாளும் திறன் கொண்ட இந்த ஆலை, மாதம் 3.6 கோடி சிப்களை உற்பத்தி செய்யும்.
மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள் இங்கு தயாரிக்கப்படும்.
செமிகண்டக்டர் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதை இது குறைக்கும்.
இந்த ஆலை உத்திரப்பிரதேசத்தின் வளர்ச்சியை வேகப்படுத்துவதுடன், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.
இந்தியா செமிகண்டக்டர் துறையில் ஒரு உலகளாவிய சக்தியாக உருவெடுக்க இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
