புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காரைக்கால் கோத்துகுளம் வாக்குப்பதிவு மையத்தில் உள்ள விவி பேட்(VVPAT) இயந்திரத்தில் இருந்து புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்காலிலுள்ள 181 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தெற்கு தொகுதியில் உள்ள கோத்துகுளம் அரசுப் பள்ளியில் காரைக்கால் தெற்கு பகுதிக்கு உட்பட்ட 27/16 வாக்குச்சாவடியில் உள்ள விவி பேட் இயந்திரத்தில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வாக்குப்பதிவு மையத்திலிருந்து அதை வெளியில் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் அதிலிருந்து பேட்டரியை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து புது பேட்டரி மாற்றப்பட்டது. விவி பேட் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் 10 நிமிடத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வாக்காளர்கள் புகை வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பேட்டரியில் ஏற்பட்ட வெப்பம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்ற தகவல் வெளிவந்துள்ளது. தற்போது புது பேட்டரி மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடந்து வருகிறது.
