குழந்தைகள் மாயமான வழக்குகளின் நிலை என்ன?: ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

புதுடில்லி: குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போன வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க ராஜஸ்தான், பீஹார் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு, மத்திய அரசின் தேசிய மனித உரிமைகள் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டில் சமீப காலமாக குழந்தை கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், மாயமானவர்கள் வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்க, தேசிய மனித உரிமைகள் கமிஷன் முடிவு செய்துள்ளது.


மனித கடத்தல்

இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் மாயமாவதும், அது தொடர்பான வழக்குகளில் மந்தநிலை நிலவுவது குறித்தும் ஊடகங்கள் சமீபத்தில் அறிக்கைகள் வெளியிட்டன.

அதன்படி, 2013 முதல் தற்போது வரை பீஹாரில் ஆண்டுதோறும் 12,000 – 14,000 வரையிலானோர் மாயமாகியுள்ளனர். இவற்றில் பல வழக்குகள் குழந்தைகள் சார்ந்தவை.

இருப்பினும், காணாமல் போன குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா, பீஹார், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான மனித கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்கள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் ஒடிஷா முதலிடத்திலும், அதை தொடர்ந்து பீஹார் இரண்டாவது இடத்திலும் உள்ளன. சிறுமியர் கடத்தல் தொடர்பான வழக்குகளில் ராஜஸ்தானில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.

இது, அந்த குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. காணாமல் போன குழந்தைகளில் பலர் பிச்சை எடுப்பது, குழந்தை தொழிலாளர் முறை, பாலியல் தொழில் மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது, மனித உரிமை மீறலாகும். இந்த விவகாரத்தில் மாநில அதிகாரிகள் போதிய நடவடிக்கைகள் எடுத்தும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம், கண்டுபிடிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது.

2 வாரங்கள்

எனவே, குழந்தைகள் உட்பட காணாமல் போனவர்களின் வழக்குகளில் எடுக்கப்பட்ட நிலை குறித்து, இரண்டு வாரங்களில் பதிலளிக்க, பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, ஒடிஷா, தெலுங்கானா மாநில தலைமை செயலர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க் களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link