ராய்பூர்: கூட்டு மதமாற்றம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான மசோதா, சத்தீஸ்கர் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கட்டாய மதமாற்றத்துக்கு எதிரான ‘சத்தீஸ்கர் தர்ம் ஸ்வதந்த்ரயா விதேயக் – 2026’ எனப்படும் மத சுதந்திர மசோதா – 2026 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா, இந்த மசோதாவை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். கடந்த 2000ம் ஆண்டு, மத்திய பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர் பிரிந்தபோது உருவாக்கப்பட்ட மத சுதந்திர சட்டத்துக்கு பதிலாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
திருமணம், நிதியுதவி போன்ற ஆசை வார்த்தைகள் கூறியும், மிரட்டியும் பெண்கள், குழந்தைகள், பழங்குடியினர் உள்ளிட்டோர் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்க, இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மசோதாவின் சிறப்பம்சங்கள்:
* கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை. இது மேலும், 10 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். குறைந்தபட்சமாக 5 லட்சம் ரூபாய் அபராதம்
* சிறார்கள், பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு, அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, குறைந்தது 10 லட்சம் ரூபாய் அபராதம்
* இரண்டுக்கும் மேற்பட்டோரை மதமாற்றம் செய்வது கூட்டு மத மாற்றமாக கருதப்படுகிறது. இதற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். மதமாற்றம் வழக்கில் ஜாமின் கிடையாது
* ஒருவர் தன் மூதாதையர் மதத்திற்கு மீண்டும் திரும்புவது மதமாற்றமாகக் கருதப்படாது
* மதம் மாற விரும்பும் நபர்கள், மாவட்ட நீதிபதி அளவிலான அதிகாரிகளிடம் அதற்கான அறிவிப்பை முன்னரே சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயம்.
