கெஜ்ரிவாலுடன் ரோஹித் பவார் சந்திப்பு

புதுடில்லி: தேசியவாத – சரத்சந்திர பவார் கட்சி எம்.எல்.ஏ., ரோஹித் பவார், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை டில்லியில் நேற்று சந்தித்தார்.

தேசியவாத சரத்சந்திர பவார் கட்சியின் தலைவரான மஹாராஷ்டிர மாநில துணை முதல்வராகவும் பதவி வகித்த அஜித் பவார், விமான விபத்தில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், அஜித்பவார் உறவினரும், எம்.எல்.ஏ.,வுமான ரோஹித் பவார், டில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார்.

அப்போது, அஜித் பவார் மரணத்தில் மரணத்தில் குற்றவியல் விசாரணை தொடர்பாக ஆதரவு அளிக்குமாறு, கெஜ்ரிவாலிடம் கோரிக்கை விடுத்தார். இந்த விவகாரத்தை பார்லி.,யில் எழுப்ப உதவி செய்வதாக கெஜ்ரிவால் உறுதியளித்தார்.

இதுகுறித்து, ரோஹித் பவார் கூறியதாவது:

அஜித் பவார் மரணம் விபத்தாக இருந்தாலும் சரி, அரசியல் சதியாக இருந்தாலும் சரி, இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் விரிவான குற்றவியல் விசாரணை மிகவும் அவசியம்.

மஹாராஷ்டிராவில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. மஹாராஷ்டிர மாநில போலீஸ் எங்கள் புகாரை பதிவு செய்யவில்லை. இந்த விவகாரத்தில் சி.ஐ.டி., விசாரணையும் மிக மெதுவாகவே நடக்கிறது.

மஹாராஷ்டிர மாநிலத்தின் மிக முக்கியமான தலைவருக்கே நீதி கிடைக்காது. எனவே, இந்த விவகாரத்தை பார்லிமென்ட்டில் எழுப்ப வேண்டியதும் அவசியம்.

எனவே, ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து என் கோரிக்கை குறித்து விளக்கினேன். இந்த விவகாரத்தை விரிவாக புரிந்து கொண்டார்.

இதை புறக்கணிக்கக் கூடாது என்றும், எங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் கூறினார். மேலும், இந்த விவகாரத்தை தன் கட்சி எம்.பி.,க்கள் வாயிலாக பார்லி.,யில் எழுப்புவதாகவும் உறுதியளித்தார்.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தில் நிலவும் ஊழல் குறித்தும், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் விரிவாக பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link