திருவனந்தபுரம்: சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கேரளாவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. இது, பகுதிநேர ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கேரளாவில் மார்க்., கம்யூ.,வைச் சேர்ந்த பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து சமீபத்தில் நடந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு சார்பில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 25 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இது, வரும் மார்ச் மாத ஊதியத்துடன் வழங்கப்படும் எனவும், ஜன., முன்தேதியிட்டு கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், வாரியங்கள், மானிய உதவி நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான நிதி, அத்துறைகளின் சொந்த நிதியில் இருந்து அதற்குரிய செலவினத் தொகைகளை ஈடுசெய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு சமாளிக்க முடியவில்லை எனில், மாநில அரசின் முன் அனுமதி பெறுவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த அகவிலைப்படி உயர்வு, கேரள மின்சார வாரியம் மற்றும் மாநில சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பொருந்தாது எனவும், அவை தனித்தனி அகவிலைப்படி உத்தரவுகளை வெளியிடும் எனவும் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
