பாலக்காடு: பாலக்காடு, கோங்கோடு எம்.எல்.ஏ., சாந்தகுமாரியை, மர்மநபர்கள் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து, ஆன் லைன் மோசடி செய்ய முயன்ற சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பாலக்காடு மாவட்டம் கோங்கோடு எம்.எல்.ஏ., சாந்தகுமாரி, மர்ம நபர்கள்தன்னை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து, ஆன்லைன் மோசடி செய்ய முயன்றதாக, மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரிடம் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோசடி கும்பலின் பின்னணி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து, எம்.எல்.ஏ., சாந்தகுமாரி கூறியதாவது: எனது மொபைல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் பயங்கரவாத எதிர்ப்பு படையை சேர்ந்தவர் என்றும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து உங்கள் எண் கிடைத்துள்ளதாகவும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மிரட்டும் தொனியில் பேசினார்.
சிறிது நேரத்தில், திருவனந்தபுரம் சைபர் செல் தலைமையகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, எஸ்.ஐ. சுரேஷ்குமார் என்ற பெயரில் மற்றொருவர் மலையாளத்தில் பேசினார். அப்போது, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, தனிப்பட்ட விபரங்களை கேட்டனர்.
பின், போலீஸ் சீருடை அணிந்த நபர்கள், வீடியோ காலில் பேசினர். விசாரணை முடியும் வரை தனிஅறையில் இருக்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது என எச்சரித்தனர்.அதேபோன்று, ஒரு அறைக்குள் சென்று, அவர்கள் கேட்ட ஆவணங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கினேன். மும்பையில் ஒரு வங்கிக் கணக்கு உங்கள் பெயரில் உள்ளது.
அதில் இருக்கும் பணம் பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த கும்பல் கூறியது. மும்பையில் வங்கிக் கணக்கே இல்லாத நிலையில், மும்பையில் வங்கி கணக்கு இருப்பதாக கூறியதால் சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இணைப்பைத் துண்டித்தேன். அதன் பின், பலமுறை மர்ம எண்களில் இருந்து அழைப்புகள் வந்தும் பேசவில்லை. இவ்வாறு, கூறினார்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் நிபுண் சங்கர் கூறுகையில், ”எம்.எல்.ஏ., விடம் பேசிய சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடக்கிறது. இதுபோன்ற டிஜிட்டல் அரெஸ்ட் நடைமுறையில் இல்லை. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” என்றார்.
