கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளியும் (கலையரசன்) அனுவும் (தீபா பாலு) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வெளியூரில் வசித்து வரும் இவர்கள், காளியின் பணி நிமித்தமாக மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார்கள்.

அனு கருவுற்று இருப்பதனால், காளியின் குடும்ப வழக்கப்படி அவர்களுடைய குலதெய்வமான நிறைசூழி கோயிலுக்குச் சேவலைப் பலிகொடுக்கப் புறப்படுகிறார்கள்.

கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review
கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review

இந்தப் பயணத்தில் காளிக்கும் அனுவுக்கும் என்ன ஆனது என்பதே அறிமுக இயக்குநர் துதிவானன் இயக்கியிருக்கும் ‘கொலைச்சேவல்’ திரைப்படத்தின் கதை.

கருவுற்றிருக்கும் மனைவியை அக்கறையாகக் கவனித்துக் கொள்ளும் இடத்தில் குடும்பஸ்தனாக ஸ்கோர் செய்யும் கலையரசன், மனைவியை எண்ணித் துடிக்கையிலும் எதிரிகளைத் தடுக்கப் போராடுகையிலும் தேவையானதைச் செய்திருக்கிறார்.

பதைபதைப்பு, நடுக்கம் என நடிப்பில் கதாபாத்திரத்தின் அழுத்தத்தைக் கூட்டி அனுதாபத்தைப் பெற்றிருக்கிறார் ‘ஹார்ட்பீட்’ தீபா பாலு. வசனமின்றி, படம் முழுக்க இறுக்கமான முகம் காட்டி வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார் கஜராஜ். இவர்களைத் தாண்டி, பாலசரவணன், அகரன் வெங்கட், விஜய் சத்யா ஆகியோருக்குக் குறிப்பிடும்படியான வேலை கொடுக்கப்படவில்லை.

கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review
கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review

வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகள், நிறைந்து காணப்படும் பச்சை நிற எழில், பாறைகளில் தேங்கி நிற்கும் சுனை நீர் என ஜவ்வாது மலையின் அழகியலைப் பதைபதைப்பிற்கு ஏற்றபடி பதிவு செய்திருக்கிறது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் கேமரா. ஆனால், ‘ஹை ஸ்பீட்’ ஷாட்களை இன்னும் மென்மையாக்கி, முழுமையான விஷுவல் அனுபவத்தைக் குலைக்கும் ஷாட்களின் நிலையையும் கவனித்திருக்கலாம். 

படத்தொகுப்பாளர் அஜய் மனோஜ், திடுதிடுவென ஓடும் காட்சிகளைக் கொஞ்சம் சீர்படுத்தியிருக்கலாம்.

சுவர்களில் வரையப்பட்டிருக்கும் இளையராஜா ஓவியம், நிறைசூழி தெய்வச் சிலை ஆகியவற்றில் கலை இயக்குநர் சரவணா அபிராமனின் நேர்த்தியான பணி வெளிப்பட்டிருக்கிறது. இது ஒளிப்பதிவாளர் அமைத்திருக்கும் ப்ரேம்களுக்கும் அழகு சேர்க்கிறது.

இசையமைப்பாளர் சாந்தன் அமைத்திருக்கும் ‘பிஞ்சு விரல் பாதம் இரண்டு’ என்கிற பாடல் க்ளைமாக்ஸ் காட்சியின் அடர்த்தியைக் கூட்டுகிறது. பின்னணி இசையும் காட்சிகளின் பதைபதைப்போடு நம்மை கட்டிப் போடுகிறது. ஆனால், சாதா காட்சிகளில் கூட வேண்டுமென்றே ‘பரபரப்பை’ கூட்ட முயன்றது, துருத்தலாக நிற்கிறது.

கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review
கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review

சிறுவனுக்குச் சொல்லப்படும் நிறைசூழி எனப்படுகிற நாட்டார் தெய்வத்தின் வாய்மொழி கதையிலிருந்து, நிஜ கதாபாத்திரங்கள் மூலம் அத்தெய்வத்தின் கதையாகவே விரியத் தொடங்குகிறது படம். ஆனால் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகளில் போதிய விவரணைகளைத் தராதது, கதை நடக்கும் காலத்தையும் புவியியலையும் தெளிவாகப் பதிவு செய்யாதது போன்றவற்றால் முதல் பாதி முழுக்கவே அந்நியமாகிவிடுகிறது.

ஜவ்வாது மலை எனப் பெயரளவில் மட்டுமே புவியியல் விவரம் சொல்லப்படுகிறது. ஆனால், கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வட்டார வழக்குகளில் பேசுவது குழப்பத்தையே உண்டாக்குகிறது.
இப்படியான விஷயங்களோடு, கதை பெரியளவில் எங்குமே நகராமல், பேசியவற்றையே மீண்டும் மீண்டும் விவரித்தபடியே அன்னநடைபோடுகிறது திரைக்கதை. லேசாக எதிர்பார்ப்பையும் பதைபதைப்பையும் தூண்டியபடி இடைவேளை புள்ளியை எட்டுகிறது படம். அதன் பிறகு, திரைக்கதைக்குள் சேர்க்கப்பட்டிருக்கும் காதல் பிளாஷ்பேக்குகள் தொடக்கத்தில் கொஞ்சம் சுவாரஸ்யம் தந்து, எமோஷனலாக இணைய வைத்தாலும், அதையும் அளவிற்கு மேல் இழுத்து அயர்ச்சியையே கூட்டியிருக்கிறது திரைக்ததை.

அந்தப் பிளாஷ்பேக் கதையும் பல லாஜிக் கேள்விகளுடனேயே முற்றும் பெறுகிறது. ஆனால், ஆணவக்கொலை பற்றிப் பேசும் க்ளைமாக்ஸ் காட்சியைத் தாக்கம் தரும் ஒன்றாக மாற்றி, ஆறுதல் தருகிறது படம். சாதி வெறியை தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படுவதையும் பேசுகிறது க்ளைமேக்ஸ்.

கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review
கொலைச்சேவல் விமர்சனம் | Kolaiseval Review

‘சாதி இல்லைனு சாமியே சொன்னாலும் இவங்க நம்பமாட்டாங்க’ என்பது போன்ற வசனங்களும் படத்தின் பலம்!
நல்லதொரு மேக்கிங் தந்து, அடர்த்தியான திரைமொழியை அமைத்து திரைக்கதையின் நடுப்பகுதியை இன்னும் சீர் செய்திருந்தால் க்ளைமாக்ஸ் மட்டுமின்றி மொத்த படமும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கும்.

Source link