கொழும்பு: உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், அவசரகால உதவியாக, நம் அண்டை நாடான இலங்கைக்கு, 38,000 டன் எரிபொருளை நம் நாடு வழங்கியது.
மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, பிப்., 28 முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுப்பதால், அப்பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவுகிறது.
கடும் தட்டுப்பாடு உலகின், 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், நம் நாடு உட்பட உலகம் முழுதும், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வினியோகம் தடைப்பட்டுள்ளதால், இலங்கையில் எரிவாயு, கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே பேச்சு நடத்தினார்.
அப்போது, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எரிபொருள் தந்து உதவும்படி அவர் கோரியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவசர கால உதவியாக இலங்கைக்கு, 38,000 டன் எரிபொருளை மத்திய அரசு அனுப்பி வைத்தது.
இதில், 20,000 டன் டீசல், 18,000 டன் பெட்ரோல் அடங்கும். இந்த எரிபொருளை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல், சமீபத்தில், கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தது.
நெருக்கடியான நேரத்தில், மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்துக்கு எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இலங்கைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான நேரம் நம் நாட்டின் இந்த உதவிக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. அதிபர் அனுர குமார திசநாயகே, மத்திய அரசின் உதவிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இது குறித்து, அந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், சகி ஜன பலவேகய கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசா கூறுகையில், ”நெருக்கடியான நேரத்தில் கை கொடுத்த இந்தியாவுக்கு நன்றி.
”இதுவே சிறந்த நட்புக்கு சான்று. நமக்கு தேவைப்படும் போது உறுதுணையாக நின்றவர்களை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது,” என்றார்.
