கோட்டயம்: ''கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம், கட்சியின்

கோட்டயம்: ”கேரளாவில் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம், கட்சியின் வெற்றியை பாதிக்காது,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு, ஏப்., 9ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இதில் ஆளும் கூட்டணிக்கும், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. காங்கிரசில் வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம் நீடிப்பதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, காங்., மூத்த தலைவரும், கோட்டயம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில், தற்போது வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள் பெரிதாக குழப்பம் ஏற்படவில்லை. காங்., மிகப்பெரிய கட்சி. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் கட்சியில் இருக்கின்றனர். எனவே, கருத்து வேறுபாடுகள் எழுவது சகஜமானது.

ஆனால், அது தீர்க்க முடியாத பிரச்னை இல்லை. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

இந்த தேர்தலில், ஆளுங்கட்சியை தோற்கடிப்பதே முக்கிய நோக்கம். எனவே, கட்சிக்குள் எந்த வேறுபாடு இருந்தாலும், அதை பேசி தீர்த்துக் கொள்வோம்.

வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குழப்பங்கள், தேர்தல் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link