சென்னை : மதுரை மாவட்டத்தில், விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலை, ‘இடிக்காமல் அப்படியே திருப்பணி மேற்கொள்ள வேண்டும்’ என, முஸ்லிம்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதை ஏற்று அறநிலையத்துறை திருப்பணியை துவக்காமல் இருப்பது, ஹிந்துக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான, விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் உள்ளது. இது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி செய்ய, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், கோவில் கட்ட அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 12ம் தேதி செய்தி வெளியானது.
இந்நிலையில், அப்பகுதி முஸ்லிம்கள், கோவிலை இடிக்காமல், அப்படியே திருப்பணி மேற்கெள்ள வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருப்பணியை துவக்காமல் உள்ளனர் எனப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கூறியதாவது: விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலுக்கு, 2 ஏக்கர், 20 சென்ட் நிலம் உள்ளது. கோவில் அருகில், மசூதியின் ஒரு புற வாசல் உள்ளது. மசூதிக்கு செல்லும் வழியில், விநாயகர் கோவில் கருப்பணசாமி கோவில் உள்ளதால், தங்களின் வழிபாட்டுக்கு இடையூறாக அமையும் என்ற உள்நோக்கத்தோடு, முஸ்லிம்களும், அவர்களுக்கு உறுதுணையாக, சிலரும் செயல்படுகின்றனர். ‘அவரவர் வழிபடும் கோவில் அவரவருக்கு’ என, இஸ்லாம் வலியுறுத்தினாலும், ஹிந்து மத வழிபாட்டு தளத்தை கட்ட, முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில், பெரும் சந்தேகம் எழுகிறது.
ஹிந்துக்கள் யாரும் முஸ்லிம்கள் வழிபாட்டில், வக்ப் வாரிய விஷயத்தில் தலையிடுவதில்லை. ஆனால் முஸ்லிம்கள், ஹிந்து சமய அறநிலையத்துறை விஷயத்தில், பல முகமூடிகள் அணிந்து, கோவிலுக்கு எதிராக செயல்படுவது, எந்த விதத்தில் நியாயம். நீதிமன்ற உத்தரவின்படி, தும்மநாயக்கன்பட்டி விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலை கட்ட, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
