சட்டசபை தேர்தலில் களமிறங்கும் மத்திய அமைச்சர் எல்.முருகன்?

– நமது சிறப்பு நிருபர் –

மத்திய அமைச்சர் முருகன், ராசிபுரம் அல்லது தாராபுரம் தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ.,வில் தற்போது, நயினார் நாகேந்திரன், காந்தி, வானதி, சரஸ்வதி ஆகிய நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இந்த தேர்தலில், 40 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ., முடிவு செய்துள்ளது. அதில், 15 – 20 தொகுதிகள் பா.ஜ., விரும்பும் இடங்களாக இருக்கும் என, அ.தி.மு.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மத்திய உளவு துறை அறிக்கை அடிப்படையில், வேட்பாளர் பட்டியலை பா.ஜ., தயாரிக்கிறது. மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி போட்டியிடவில்லை என கூறிவிட்டார். கோவை வடக்கு – வானதி, நாகர்கோவில் – காந்தி என, அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளே ஒதுக்கப்பட உள்ளன. நயினார் நாகேந்திரன் மட்டும் திருநெல்வேலிக்கு பதிலாக சாத்துாரில் போட்டியிடுகிறார்.

இதுபோல, அண்ணாமலை – சிங்காநல்லுார், மத்திய அமைச்சர் முருகன் – ராசிபுரம் அல்லது தாராபுரம், வேளச்சேரி – தமிழிசை அல்லது கராத்தே தியாகராஜன் அல்லது டால்பின் ஸ்ரீதர், தி.நகர் – நாகராஜன் அல்லது வினோஜ் செல்வம் என போட்டியிட வாய்ப்பு உள்ளது. மதுரை வடக்கு, பரமக்குடி, கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிடும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Source link