மதுரை: சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு பிறரின் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. மனநலம் பாதித்த குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ஒரு பெண்குழந்தை மனநல குறைபாட்டுடன் பிறந்தது. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் இருந்தது. தனியார் கல்லுாரியில் பேராசிரியராக இருந்த ரேவதி மகளை பராமரிப்பதற்காக பணியிலிருந்து விலகினார். இருப்பினும், குழந்தையை சரிவர பராமரிக்க முடியவில்லை. கணவன், மனைவிக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.
குழந்தையை கொலை செய்ய தீர்மானித்தனர். அவருடன் 2018 அக்.1 ல் ஒரு கோயிலுக்கு சென்றனர். கோயில் பின்புறத்தில் குழந்தைக்கு ‘டாப்கோர்’எனும் விஷம் கொடுத்தனர். குழந்தை எழுப்பிய சப்தம் கேட்டு அப்பகுதியிலிருந்த மக்கள் மேலும் விஷம் கொடுக்காமல் தடுத்தனர். குழந்தை ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கு 2018 அக்.6 ல் இறந்தது. மல்லி போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இருவருக்கும் அந்நீதிமன்றம் 2022 ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சாட்சிகளில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறினர். இருப்பினும், மனுதாரர்கள் அளித்த விஷத்தால் குழந்தை இறந்ததை மருத்துவ ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. குழந்தையை வளர்ப்பதில்பெற்றோர் எதிர்கொண்ட சிரமங்களுக்கு இந்நீதிமன்றம் அனுதாபம் தெரிவிக்கிறது. எனினும், அக்குழந்தை தானாகவே இவ்வுலகிற்கு வரவில்லை; அது மனுதாரர்களுக்கு பிறந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மனநலக் குறைபாடு கொண்ட குழந்தைகளை பெற்றோர் அழிக்க சட்டம் அனுமதித்தால், அத்தகைய எந்தக் குழந்தையும் இவ்வுலகில் உயிருடன் நிலைத்திருக்க முடியாது. குழந்தை மனநோயுடன் அல்லது உடல் ஊனமுற்றவராக அல்லது எந்தக் குறையும் இன்றி பிறந்தாலோ, அவர்களை பராமரித்து பாதுகாப்பது பெற்றோரின் கட்டாயக் கடமையாகும். சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொண்டு பிறரின் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. இன்றும் பல பெற்றோர், மாற்றுத்திறனுடன் பிறந்த குழந்தைகளுக்காக அளவற்ற தியாகங்களை செய்து, தேவையெனில் தங்களது உயிரையும் அர்ப்பணிக்கின்றனர். மனுதாரர்களை கொலை குற்றத்திற்காக கீழமை நீதிமன்றம் தண்டித்தது சரியானதே. அந்நீதிமன்ற தீர்ப்பில் சட்டவிரோதம் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. அது உறுதி செய்யப்படுகிறது. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
