சண்டிகர்: சட்டவிரோத முறைகேடுகள், ஊழல் குற்றச்சாட்டை அடுத்து அல் – பலாஹ் பல்கலையை நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஹரியானா அரசு, அதன் நிர்வாகியாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமித்துள்ளது.
கடந்தாண்டு நவ., 10ல், டில்லி அருகே செங்கோட்டையில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில், அதை இயக்கிய பயங்கரவாதி டாக்டர் உமர் நபி உள்ளிட்ட 15 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக, உமர் நபியின் கூட்டாளிகளான சில டாக்டர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், இறந்த உமர் நபி மற்றும் கைதான டாக்டர்கள் முஸம்மில் ஷகீல், ஷாஹின் ஷாஹித் ஆகியோர், ஹரியானாவின் பரிதாபாதில் செயல்படும் அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் அங்கு விசாரணை நடத்தினர்.
இதில், மாணவர்களிடம் சட்டவிரோதமாக கட்டணம் வசூலித்து, பல்கலை நிர்வாகம் 493 கோடி ரூபாய் முறைகேடு செய்தது அம்பலமானது.
இது தொடர்பாக, விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், அல் பலாஹ் பல்கலை துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திக்கை கைது செய்தனர். பல்கலை நிர்வாகத்துக்கு சொந்தமான 140 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இந்நிலையில், அல் பலாஹ் பல்கலையை ஹரியானா அரசு தன் முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமித் அகர்வால் பல்கலை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலையின் நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களின் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
