சண்டிகர்: பாகிஸ்தான் எல்லையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 24 கிலோ ஹெராயின், 21 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது: எல்லை பாதுகாப்புப் படை மற்றும் போலீஸ் இணைந்து, அண்டை நாடான பாகிஸ்தான் எல்லையில் அதிரடி சோதனை நடத்தினர். ஜக்ஜித் சிங் என்ற ராணா, மன்பிரீத் சிங் மற்றும் ரோஷன் சிங் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 24.5 கிலோ ஹெராயின், 21.5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மூவரும் பஞ்சாப் மாநிலம் அமிர்தரசஸ் நகரை சேர்ந்தவர்கள் என்பதும், பாகிஸ்தானில் செயல்படும் போதைப் பொருள் மற்றும் கள்ளத் துப்பாக்கி கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
