"சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க மறுத்ததால் பழிவாங்கினர்"- தந்திரி வெளிப்படுத்திய தகவலால் விவாதம்!

“கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும் அரசுக்கு என்மீது கோபம் இருந்தது” என சபரிமலை தந்திரி வெளிப்படுத்தி உள்ளார்.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரக பலகர்கள் சிற்பம் மற்றும் திருநடை ஆகியவற்றில் பதிக்கப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரரு கைதுசெய்யப்பட்டிருந்தார். சுமார் 41 நாள்கள் சிறைவாசத்திற்குப் பின் அவருக்கு கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவால் வலுவான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. கூட்டுச்சதியில் அவர் ஈடுபட்டதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. உன்னிகிருஷ்ணன் போற்றிக்கும் தந்திரிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கோயில் பூஜைகள் உள்ளிட்ட தாந்திரீக விஷயங்களுக்கு மட்டுமே தந்திரி பொறுப்பானவர் ஆவார் எனவும் கோர்ட் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தடையாக இருந்ததால் பழிவாங்கும் விதமாக அரசு இந்த வழக்கில் கைதுசெய்துள்ளதாக தந்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கொல்லம் விஜிலென்ஸ் கோர்ட்டில் தந்திரி கண்டரரு ராஜீவரரு சமர்ப்பித்த ஜாமீன் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் தந்திரி கூறியுள்ளதாவது:

“சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிப்பதை தடுத்ததைத் தொடர்ந்து பழிவாங்கும் விதமாக தங்கம் கொள்ளை வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்துள்ளனர்.

சபரிமலை
சபரிமலை

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை திருப்திபடுத்தும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் இளம்பெண்களை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க முயன்றனர். அதற்கான முயற்சிகள் நடந்தபோது பூஜைகளை நிறுத்தி வைப்பேன் என்றும், கோயிலை விட்டு வெளியேறிவிடுவேன் எனவும் நான் தெரிவித்தேன். கோயிலுக்குள் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டேன் என தீர்க்கமான முடிவை எடுத்தேன். சபரிமலை கோயிலை தினமும் திறக்கும் வகையில் அரசு திட்டம் தீட்டியதையும் எதிர்த்ததாலும், அரசுக்கு என்மீது கோபம் இருந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றியை நான் சபரிமலைக்கு அழைத்துவந்தது போன்று சித்திரிக்கும் விதமாக சில விஷயங்களை  விசாரணைக்குழு மறைத்துவைத்தது. சிறப்பு விசாரணைக்குழு ஏற்கனவே சமர்பித்த இரண்டு அறிக்கைகளிலும் எனது பெயர் இல்லை. திடீரென எனது பெயரை சேர்த்துள்ளனர்.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு

சபரிமலை கோயில் ஆசாரங்கள், அனுஷ்டானங்கள், பூஜைகள் ஆகியவை மட்டுமே எனக்கு வரையறுக்கப்பட்டுள்ளன. கோயில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலோ, சொத்துக்களை பராமரிப்பதிலோ தந்திரிக்கு எந்த அதிகாரமும் இல்லை. தேவசம்போர்டு வழிகாட்டு நெறிமுறைகள்படி கோயிலில் விலைமதிப்புமிக்க பொருள்கள் மற்றும் திருவாபரணங்களை கணக்கெடுப்பது, பாதுகாப்பது போன்றவை தேவசம்போர்டுக்கு மட்டுமே உள்ள பொறுப்பு ஆகும். நிர்வாகத்தின் முறைகேடுகளை தடுக்க எனக்கு சட்டப்பூர்வமான பொறுப்பு இல்லை. அதனால், இதுபோன்ற விஷயங்களில் நான் பதில் கூறாமல் இருப்பதை குற்றத்துக்கு கூட்டாக நின்று சதிசெய்ததாக கருதமுடியாது.”

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவை ஆளும் சி.பி.எம் அரசு சபரிமலை விவகாரத்தில் தந்திரியை பழிவாங்கிவிட்டதாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Source link