சபரிமலை: 2025- – 26 மண்டல ,மகர விளக்கு சீசனில் சபரிமலையில் பூஜாரிகள் மற்றும் தினக்கூலி பணியாளர்கள் வங்கி மூலம் கோடிக்கணக்கான பணம் பரிமாற்றம் செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் தனலட்சுமி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகள் வழியாக பணம் பரிமாற்றம் செய்யப்படும். தங்கம் கொள்ளைக்கு பின்னர் சபரிமலையில் பல்வேறு விஷயங்கள் துாசி தட்டி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் சபரிமலையில் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஊழியர்கள் மற்றும் பூஜாரிகளும் ,உதவி பூஜாரிகளும் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் கையில் பணம் வைத்திருந்தால் லஞ்ச ஒழிப்பு துறையிடம் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் அவ்வப்போது பணத்தை வங்கி வழியாக பலரது கணக்கில் அனுப்பி விடுகின்றனர்.
அந்த வகையில் கடந்த சீசனில் மட்டும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழியாக 8.08 கோடி ரூபாய் 1667 பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தனலட்சுமி பேங்கில் 942 பரிமாற்றங்கள் மூலம் 11.45 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மேல் சாந்தி மற்றும் பூஜாரிகள், தினக்கூலி பணியாளர்கள், குத்தகைதாரர்கள் என 18 கணக்குகளில் இந்த பரிமாற்றம் நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் நெய் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. போஸ்ட் ஆபீஸ் மூலம் 14.08 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தரிசனத்திற்கு உதவி செய்து பணம் வாங்குவது பற்றியும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலர் தினக் கூலி அடிப்படையில் இங்கு வேலைக்கு வந்துவிட்டு லாட்டரி விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.
சபரிமலையில் தேவைக்கு அதிகமாக தினக்கூலி பணியாளர்களை நியமிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் தினக்கூலி பணியாளர்கள் நியமனம் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிமன்றம் நியமித்துள்ள தனி அதிகாரி இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
