புதுடில்லி: சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வயது கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்து வரும் ஏஐ மாநாட்டில் நேற்று (பிப்ரவரி 17) அவர் பேசியதாவது; ஏஐ மூலம் டீப் பேக் (Deepfake) வீடியோக்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. நமது குழந்தைகளையும், சமூகத்தையும் இந்த அச்சுறுத்தலில் பாதுகாக்க வேண்டும். எனவே, இதனை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவது அவசியமாகும். நெட்பிளிக்ஸ், யுடியூப், மெட்டா அல்லது எக்ஸ் உள்பட எந்த நிறுவனமாக இருந்தாலும், அரசின் சட்டத்திற்குட்பட்டே செயல்பட வேண்டும்.
எனவே, சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கான வயது கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. டீப் பேக் விவகாரம் குறித்து பார்லி குழு விரிவாக ஆய்வு செய்துள்ளது. இது தொடர்பாக பார்லியில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை உருவாக்கி கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்படும், இவ்வாறு அவர் கூறினார்.
