சர்வதேச தரத்தில் பிராண்டுகள் தேவை அரசுக்கு ஆடை துறை வலியுறுத்தல்

திருப்பூர்: ‘சர்வதேச அளவிலான பிராண்டுகளை உருவாக்க அரசு தரப்பு ஊக்குவிக்க வேண்டும்,’ என, டில்லியில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவின் ஆடை துறையின் உலகளாவிய பங்கை உயர்த்துவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, டில்லியில் நடந்தது.

மத்திய ஜவுளித்துறை கூடுதல் செயலர் ரோஹித் கன்சல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பேராசிரியர் அசோக் குலாட்டி தலைமையில், முனைவர் சுலக் ஷனா ராவ், ஆயுஷி குப்தா, ரியா ஜெயின் ஆகியோரின், ஓராண்டு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையின் முழுமையான வளர்ச்சியை, பருத்தி உற்பத்தியிலிருந்து, மதிப்பு கூட்டப்பட்ட ஆடையாக உலக சந்தை வரை விவரிக்கும் அறிக்கையாக இருந்தது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் ‘சைமா’ பிரதிநிதிகள் பங்கேற்றனர். திருப்பூர் பின்னலாடை தொழிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, மத்திய அரசின் ஜவுளி கொள்கை தயாரிப்புக்கான முன்மொழிவுகளை அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேச அளவிலான பிராண்டுகளை உருவாக்க அரசு தரப்பு ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

முயற்சிக்க வேண்டும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) பொதுசெயலர் தாமோதரன் கூறுகையில், “ஆய்வறிக்கை, இந்திய ஜவுளித்துறையை துல்லியமாக படம் பிடித்துள்ளது. திருப்பூர் தொழில்துறையினர், வெளிநாட்டு பிராண்டுகளுக்காக உற்பத்தி செய்து வருகின்றனர். இனியாவது, சர்வதேச அளவிலான பிராண்டுகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். பிராண்டிங் ஏற்றுமதி நிலையான வளர்ச்சியை கொடுக்கும். நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில், 68 சதவீதம் பங்கு வகிக்கும், திருப்பூரின் உழைப்பும் அதன் முக்கியத்துவமும் சர்வதேச அளவில் வெளிப்பட வேண்டும்,” என்றார்.

Source link