“சவுமியா தரப்பில் இருந்து ஆதரவு கேட்டால், அவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து, எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்று கொள்வோம்,” என, த.வா.க., தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
த.வா.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், அக்கட்சி தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டி:
பா.ம.க.,வை சேர்ந்த அன்புமணி மனைவி சவுமியா போட்டியிடும் தர்மபுரி தொகுதியில், அவரை எதிர்த்து போட்டியிட நிர்ப்பந்தித்ததால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வந்தேன்.
சவுமியா, பசுமை தாயகம் அமைப்பின் மூலம் சுற்றுச்சூழலுக்கு இயன்ற உதவிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அவர் தரப்பில் இருந்து ஆதரவு கேட்டால், அவர் போட்டியிடும் தொகுதியில் இருந்து, எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்று கொள்வோம்.
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், எங்கள் கூட்டணி அவர்களை எதிர்த்து போட்டியிடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, ‘சவுமியாவை எதிர்த்து போட்டியிட நிர்ப்பந்தித்ததால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வந்ததாக தெரிவித்ததற்கு ஆதாரம் உள்ளதா’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “அறிவாலயத்தில், தி.மு.க.,வை சேர்ந்த மூத்த அமைச்சர் இதை சொன்னார்.
“அப்போது உடன், ராமதாஸ் அணி சார்பில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் அருள் இருந்தார். அவர் தான் சாட்சி,” என்றார்.
