சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் உடல்நலக் குறைவால் இறந்த தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்த கையோடு மகன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்றார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் 45. ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்தார். இவரது மகன் இளமாறன் 15, சிங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து பொதுத்தேர்வு எழுதி வருகிறார். உடல்நிலை சரியில்லாததால் சரவணன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் நேற்று காலை சிங்கம்புணரி மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இளமாறன் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்துவிட்டு, ஆங்கிலத் தேர்வு எழுத தேர்வு மையத்துக்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிகழ்வு அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது.
