தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சட்டமன்ற உறுப்பினராக உள்ள கே.ஏ.பாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் இன்று (04-04-26) சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. கிஷன்குமாரிடம் அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மகன் கேஏபி. அரிசக்திவேல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது அதிமுக தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், அதிமுக மாவட்ட அவைத் தலைவர் எம்எஸ்என்.குமார், பாரதிய ஜனதா கட்சி தொகுதி பொறுப்பாளர் ஜி.பாலசுப்ரமணியம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக வேட்பாளர் கே.ஏ.பாண்டியன் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று வேட்பு மனுவை வைத்து வழிபாடு செய்தார். பின்னர் மேலரத வீதியில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தில் இருந்து நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.ஏ.பாண்டியன் மூன்றாவது முறையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
