புதுடில்லி: மத்திய அரசின் முன்னாள் தலைமைப்பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியனுக்கு சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர் விருதை சிகாகோ பல்கலை வழங்கி கவுரவித்து உள்ளது.
2018 முதல் 2021 வரை மத்திய அரசின் 17 வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வந்தவர் கே.வி.சுப்பிரமணியன். ஐஎம்எப் அமைப்பிலும் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். பொருளாதார தலைமை ஆலோசகராக இருந்த பொது 3 பொருளாதார ஆய்வறிக்கைகளை தயாரித்து உள்ளார். தற்போது அவர், ஹைதராபாத்தில் உள்ள பொருளாதார பள்ளியில் நிதித்றை பேராசிரியர் ஆக உள்ளார். ‘ India@100’ என்ற புத்தகத்தையும் எழுதி உள்ளார்.
சிகாகோ பல்கலை 1941ம் ஆண்டு முதல் தொடர்ந்து 85 ஆண்டுகளாக சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது. இந்த விருதை இதுவரை இந்தியர் யாரும் பெற்றது இல்லை. முதல்முறையாக கே.வி.சுப்பிரமணியன் இந்த விருதை பெற்று சாதனை படைத்து உள்ளார்.
நோபல் பரிசு வென்ற 14 பேர் இந்த பரிசை வென்றுள்ளனர். அவர்களின் வரிசையில் கே.வி.சுப்பரிமணியன் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த விருதை பெற்றவர்கள் அனைவரும், மேற்கத்திய அமைப்புகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக பெற்றவர்கள். ஆனால், இந்தியாவில், இந்தியாவுக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக கே.வி.சுப்பிரமணியனுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
இந்த விருது தொடர்பாக கே.வி.சுப்பிரமணியன் கூறியதாவது: இது பெருமை அளிக்கிறது. இந்தியாவில் இந்தியாவிற்காக செய்த பணிக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தருகிறது. இந்தியாவில் சிறந்த பணிகளை செய்து இந்தியர்களுக்கு ஊக்கமளித்த சி.வி.ராமன், ஹோமி பாபா முதல் விக்ரம் சாராபாய், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் அடிச்சுவடுகளை பின்பற்றுவது பாக்கியம் எனத் தெரிவித்துள்ளார்.
ஐஐடி கான்பூர் மற்றும் கோல்கட்டா ஐஐஎம் ஆகியன ஏற்கனவே, கே.வி.சுப்பிரமணியனுக்கு சிறந்த முன்னாள் மாணவருக்கான தொழில்முறை சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளன.
