பெண்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள சட்டசபை இடங்களில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் முக்கியமான அரசிலமைப்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட முடிவு செய்துள்ளது.
ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த முன்னெடுப்பு அரசியல் ஆதாயத்திற்காக என எதிர்க்கட்சிகள் பாஜக-வை விமர்சனம் செய்து வருகின்றன.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கார்கே கூறியிருப்பதாவது:-
* எங்களை கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட இருக்கிறது.
* மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்துடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாமல் உங்கள் அரசு எங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறது.
* தொகுதி மறுவரையறை மற்றும் பிற அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லாமல், மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து எந்தவொரு பயனுள்ள விவாதத்தையும் நடத்துவது சாத்தியமற்றது.
* மாநில தேர்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவது, அரசியல் ஆதாயத்திற்காக மகளிர் சட்டத்தை அரசு அவசரமாகச் செயல்படுத்துகிறது என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது
* ஏப்ரல் 29-க்குப் பிறகு, மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்துடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
* திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்கள் மத்திய, மாநில அரசுகளைப் பாதிக்கும். ஜனநாயகத்தில் அனைத்துக் கட்சிகள், மாநிலங்களின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும்.
இவ்வாறு கார்கே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
