எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை துல்லியமாக பராமரித்தால்தான், உலக அளவில் ஜொலிக்கும் நிலை வரும் என, மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார். காலநிலை சார்ந்த வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது, கார்பன் குறைப்பு திட்டங்கள் இல்லாத நிறுவனங்கள் அதிக வரிச்சுமை மற்றும் சந்தை அணுகலில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார்.
நமது நிருபருக்கு நேற்று அவர் அளித்த சிறப்பு பேட்டி:
நாட்டின் கடன் ஜி.டி.பி., விகிதத்தை 50 சதவீதமாக்கும் இலக்கு பற்றி பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான வளர்ச்சி, வட்டி விகிதங்கள் பற்றி வரையறுக்காதது ஏன்?
மத்திய பட்ஜெட் 2025- – 26ல், அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2031 வரை கடன் குறைப்பு பாதை குறிப்பிடப்பட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார சூழ்நிலை நிலையற்ற தன்மையில் இருப்பதால், மாற்றங்களுக்கு ஏற்ப நிதி கொள்கையை நெகிழ்வு தன்மையோடு வைத்திருப்பது அவசியம்.
நடுத்தர காலத்தில் கடன் குறைப்பை இலக்காக கொண்டு, வளர்ச்சி, வட்டி மாற்றங்களுக்கு ஏற்ப நிதி கொள்கையை மாற்றி கொள்ளும் வாய்ப்பை திறந்து வைத்திருப்பது அரசின் நோக்கம்.
எம்.எஸ்.எம்.இ., துறை உலகளவில் ஜொலிக்க முடியாதது குறித்து…
ஒரு நிறுவனம் நிதி நிலையை வெளிப்படையாகவும், தரத்தை உலக அளவிலும் உயர்த்தும்போது உலகளாவிய வெற்றியாளராக மாற முடியும். எம்.எஸ்.எம்.இ.,கள் கணக்கு வழக்குகளை துல்லியமாக பராமரிக்காதபோது, வங்கிகள் நீண்டகால கடன் வழங்க தயங்குகின்றன. இதனால், தர மேம்பாடு, புதிய இயந்திரங்களை வாங்குதல், உற்பத்தித் திறன் உயர்த்தும் முதலீடுகள் பாதிக்கின்றன.
இதற்கு தீர்வுபெற நீ ண்டகால கடன்களை எளிதாக்குதல், சிறு நிறுவனங்களுக்கு ஆலோசனை தளங்கள் உருவாக்குதல் மற்றும் பல நிறுவனங்கள் இணைந்து இயங்கும் சூழலை அமைப்பது அவசியம். இவற்றுடன் தொழில்நுட்பப் பகிர்வையும் ஊக்குவிக்கும் போது, எம்.எஸ்.எம்.இ., களால் உலக அளவில் போட்டி போட முடியும்.
செமிகண்டக்டர் மற்றும் அரிய வகை கனிம துறைகளில் இறக்குமதியை குறைத்து வெற்றி பெறும் வழிகள் என்ன?
இந்த துறைகளில் நாம் அடையும் வெற்றியை, நீண்ட கால கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். இந்திய செமிகண்டக்டர் மிஷன் (ஐ.எஸ்.எம்.,) 2.0 திட்டத்தை உபகரணங்கள், மூலப்பொருட்கள், முழுமையான அறிவுசார் சொத்துரிமை, பணியாளர் மேம்பாடு என பட்ஜெட்டில் விரிவாக்கம் செய்திருப்பது சிறப்பு.
உற்பத்தி, சோதனை, மூலப்பொருட்கள், திறன் மேம்பாடு மற்றும் தரநிலைகள் ஆகியவற்றில் ஏற்படும் சிறு முன்னேற்றங்கள் மட்டுமே காலப்போக்கில் ஒன்றையொன்று வலுப்படுத்தும். இப்படி, படிப்படியாக உருவானால், உண்மையான வெற்றியை அடைய முடியும்.
கார்பன் குறைப்பு, பயன்பாடு மற்றும் சேமிப்பு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது நிறுவனங்களுக்கு செலவை அதிகரிக்குமா?
சி.சி.யு.எஸ்., ஏற்றுக்கொள்வது தொழில்களின் செலவை அதிகரிக்கும். இந்த தொழில்நுட்பத்துக்கு ஆரம்ப கட்டத்தில் அதிக முதலீடு, பரிசோதனை நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்ப திறன்கள் தேவைப் படுகின்றன. குறிப்பாக எரிசக்தி அதிகம் தேவைப்படும் சிமென்ட், மின்சாரம், ரசாயனம் உள்ளிட்ட துறைகளில் செலவுகள் தவிர்க்க முடியாதவை. இதை உணர்ந்து மத்திய அரசு பட்ஜெட்டில், 5 ஆண்டுகளுக்கு 20,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
காலநிலை சார்ந்த வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் நிலையில், கார்பன் குறைப்பு திட்டங்கள் இல்லாத நிறுவனங்கள் அதிக வரிச்சுமை, சந்தை அணுகல் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பட்ஜெட் 2026-27ல் தமிழகத்துக்கு பங்கீடு குறித்து…
பட்ஜெட்டில் செமிகண்டக்டர்கள், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 7 முன்னேற்ற தயாரிப்பு துறைகளை விரிவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் போன்ற கனிம வளம் அதிகமுள்ள மாநிலங்களில் சுரங்கம், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ‘அரிய வகை கனிம வழித்தடங்கள்’ ஏற்படுத்த உள்ளோம்.
கட்டமைப்பு துறையில் அரசின் மூலதன செலவு ரூ.12.20 லட்சம் கோடியாக உயரவுள்ள நிலையில், உலகளாவிய மதிப்பு தொடருடன் இணைந்துள்ள தமிழகத்தில், முதலீடுகள் அதிகரித்து மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.
