சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் ரியல் எஸ்டேட் சட்டத்தை திருத்த முடிவு

புதுடில்லி: ரியல் எஸ்டேட் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்த தவறும் வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா பார்லி.,யில் கூறியதாவது:

ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவை ஒதுக்கீடுதாரர் (உரிமையாளர்) செயல்படுத்த தவறினால், அவருக்கு இதுவரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதற்கு பதிலாக, அவர் வாங்கியுள்ள வீட்டு மனை, அடுக்குமாடி குடியிருப்பு, கட்டடத்தின் மதிப்பில் 10 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்படுகிறது. ‘ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா- 2026’ வாயிலாக, இது மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சட்டம் என்ன சொல்கிறது?

ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாக்கவும் ரியல் எஸ்டேட் சட்டம்- 2016 கொண்டு வரப்பட்டது. அதன்படி, ரியல் எஸ்டேட் திட்டங்கள் அனைத்தையும் இதற்கான மாநில அமைப்பில் பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பு, வீட்டுமனை விற்போர் மற்றும் அவற்றை வாங்குவோர் (இவரே ஒதுக்கீடுதாரர் என அழைக்கப்படுகிறார்) இடையிலான’ பரஸ்பர ஒப்பந்தத்தை மீறினால் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு வழக்கு செல்லும். அங்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ‘ஒதுக்கீடுதாரர்’ செயல்படுத்த மறுத்தால் அவருக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

Source link