சிலுவம்பாளையம் டு சி.எம். நாற்காலி – எடப்பாடிக்கு ஏற்றம் தந்த 1989 தேர்தல்! | முதல் களம் 10 | Former CM edappadi palanisami First election and happenings around that

1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, அதிமுக ஜெயலலிதா ஆதரவு அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமே, பழனிசாமியைத் தேர்தல் அரசியலுக்குள் இழுத்தது. கட்சி பிளவுபட்டபோது அவர் ஜெயலலிதா பக்கமே நின்றார். அந்த விசுவாசத்துக்கு பலனாக, 1989 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதிக்கான அதிமுக சீட் அவருக்கே கிடைத்தது.

அதிமுகவில் அடிமட்டத் தொண்டராக, கிளைக்கழகச் செயலாளராக பல ஆண்டுகள் உழைத்த எடப்பாடிக்கு, அந்தத் தேர்தலில் கிடைத்த வெற்றி, சிறிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில்தான் கிடைத்தது. வெறும் 1,299 வாக்குகள் வித்தியாசத்திலேயே, அவர் திமுக வேட்பாளர் கே.ஆர். நடராஜனை வீழ்த்தினார். இருப்பினும், முதல் முறை போட்டியிட்டு, பெரிதாக அறியப்படாத பின்னணியிலிருந்து வந்த ஒருவருக்கு, அது சாதாரண வெற்றி அல்ல. அதைவிட முக்கியம், எடப்பாடி தொகுதி அன்று முதல், பழனிசாமியின் கோட்டையாக மாறியது. 

முதல் வெற்றிக்குப் பிறகு அவர் திரும்பவும் 1991-ல் அதே எடப்பாடி தொகுதியில் வென்றார்.1996 தேர்தலின்போது காணப்பட்ட்ட மாநிலம் தழுவிய அதிமுக எதிர்ப்பு அலையில் தோற்றாலும், 2011-ல் மிகப் பெரிய வித்தியாசத்துடனும், 2016-ல் இன்னும் பெரிய வெற்றியுடனும் திரும்பி வந்தார். அதற்கு அவர் பயன்படுத்தியது உரத்த பிரசாரங்களோ திரைப்பட நட்சத்திரக் கவர்ச்சியோ அல்ல. தொகுதிக்குள்ளேயே தங்கி, மக்களோடு மக்களாக நடத்திய அமைதியான அரசியல்தான். 

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பிரம்மாண்டமில்லாமல் வாக்குகளைத் திரட்டும் அவரது திறமை, ஜெயலலிதாவின் கண்களில் படத் தொடங்கியது. 2000-களின் தொடக்கத்திலேயே மேற்கு மாவட்டங்களின் கட்சி அமைப்பின் ஒருங்கிணைப்புக்கு அவர் நம்பிக்கைக்குரியவராக உருவெடுத்தார். கட்சிக்குள் சத்தமில்லாமல் வேலையை முடிக்கும் திறன் அவருக்கு அமைச்சரவையிலும் இடத்தைப் பெற்றுத் தந்தது. 2001-ல் பொதுப்பணித் துறை அமைச்சரானார். அந்தப் பொறுப்பையும் சர்ச்சையோ சத்தமோ இல்லாமல் நிர்வகித்தார். அந்த அமைதியான நம்பகத்தன்மைதான் அவரை ஜெயலலிதாவுக்கு அருகில் நெருக்கமாக்கியது. கட்சி விவகாரங்களைக் கவனிக்கும் ஐவர் குழுவில் ஒருவராகவும் அவர் இடம்பிடித்தார். 

Source link