சில்வர் அண்டா வினியோகம் 'ஜரூர்'; கோவையில் தி.மு.க., தாராளம்

கோவை: கோவை மாவட்ட வாக்காளர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தி.மு.க.,வினர் சில்வர் அண்டா வினியோகித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்ட தி.மு.க., சார்பில், பூத் வாரியாக நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. வாக்காளர் தீவிரத் திருத்தப் பணி நடந்தபோது, வீடு வீடாகச் சென்று எடுத்த பட்டியல் அடிப்படையில், உத்தேசமாக எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டது.

தி.மு.க., – கூட்டணி கட்சிகள் அல்லது நடுநிலை என வாக்காளர்களை தி.மு.க.,வினர் பிரித்து பட்டியல் தயாரித்தனர். இதில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்களை தவிர, மற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்க டோக்கன் வழங்கினர்.

குடும்ப தலைவர் பெயர், தொகுதி, பூத் எண், குடும்ப எண், தொடர் எண், பகுதி கழகம், குடும்பத்தில் உள்ள வாக்காளர்கள் – ஆண், பெண், மொத்தம் குறிப்பிட்டு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது வார்டு செயலாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் மூலமாக வீடு வீடாகச் சென்று டோக்கனை சரி பார்த்து விட்டு சில்வர் அண்டா வழங்குகின்றனர்.

டோக்கனில் தொடர் எண்ணுக்கு கீழ் 4 பாக்ஸ் இருக்கிறது. அதில், ஒரு பாக்ஸில் டிக் செய்து திருப்பிக் கொடுக்கின்றனர். அதனால், இன்னும் 3 பரிசு பொருட்கள் வரும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. வரும் 15 அல்லது 16ல் தேர்தல் தேதி அறிவிக்கலாம் என்கிற பேச்சு அடிபடுகிறது.

அதற்கு முன், டோக்கன் கொடுத்த அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்க, கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தி.மு.க.,வினர் கூறுகையில், ‘முதல்கட்டமாக அண்டா வந்தது. குடும்பத்துக்கு ஒன்று வீதம் வழங்கி, டோக்கனில் குறிப்பிட்டு கொடுக்கிறோம்.

இன்னும் பரிசுப் பொருட்கள் வருமென கூறியிருப்பதால், டோக்கனை பத்திரமாக வைத்திருக்க அறிவுறுத்தி உள்ளோம். ஏற்கனவே பட்டியல் படி, ஒருவருக்கு கூட விடுபடாமல் பரிசு பொருள் வழங்கி விடுவோம்’ என்றனர்.

Source link