சென்னை: சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ, தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நம் நாட்டில், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., – ஐ.எப்.எஸ்., – ஐ.ஆர்.எஸ்., உட்பட 23 சிவில் சர்வீசஸ் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை, யு.பி.எஸ்.சி., எனும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.
முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என, மூன்று நிலைகளாக இத்தேர்வுகள் நடத்தப் படுகின்றன.
அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு, கடந்த ஆண்டு ஜன., 22ம் தேதி வெளியிடப்பட்டது. சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு, 79 நகரங்களில், 2025 மே 25ம் தேதி நடந்தது; 7 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர்.
முதல்நிலை தேர்வு முடிவு, கடந்த ஜூன் 11ம் தேதி வெளியானது. முதல்நிலை தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 723 பேர் உட்பட, 14,156 தேர்ச்சி பெற்றனர்.
அதைத்தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு, கடந்த ஆகஸ்ட் 22 முதல் 31ம் தேதி வரை நடந்தது. முதன்மை தேர்வு முடிவு, நவ., 11ம் தேதி வெளியானது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 155 பேர் உட்பட, 2,756 பேர், நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். நேர்முகத் தேர்வு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
தற்போது, ஐ.ஏ.எஸ்.,
தொடர்ச்சி 11ம் பக்கம்
பதவிக்கு – 180, ஐ.எப்.எஸ்., – 55, ஐ.பி.எஸ்., – 150, ‘குரூப் ஏ’ பதவிக்கு – 507, ‘குரூப் பி’ – 195 என, மொத்தம் 1,087 காலிப் பணியிடங்கள் உள்ளன. அதில், நேர்முகத் தேர்வு அடிப்படையில், 958 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான முடிவுகள் நேற்று வெளியாகின.
அதில், ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி, தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மருத்துவரான இவர், எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முடித்துள்ளார்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி சுவீ, தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த அகான்ஷ் துல், தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ராஜா முகைதீன், தேசிய அளவில் ஏழாம் இடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில்
60 பேர் தேர்ச்சி
சிவில் சர்வீசஸ் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வை தமிழில் எழுதி, அருண் குமார் 585வது இடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் தேர்ச்சி பெற்ற 60 பேரில், 56 பேர், தமிழக அரசின், ‘நான் முதல்வன்’ ஊக்கத் தொகை பயிற்சி திட்டத்தில் பயன் பெற்றிருப்பதாக, திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது. அதில் 39 பேர், ‘நான் முதல்வன்’ மற்றும் அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையம் இணைந்து நடத்திய உறைவிட பயிற்சி திட்டத்தில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
