'சீட்' எண்ணிக்கையை குறைத்தாலும் ஏற்றுக் கொள்வோம்: துரை வைகோ

சென்னை: ”தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது. தற்போது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,” என, அக்கட்சியின் முதன்மை செயலர் துரை வைகோ கூறினார்.

ம.தி.மு.க., உயர்நிலை குழு அவசர ஆலோசனை கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். துரை வைகோ அளித்த பேட்டி:

தனிச்சின்னமா, உதயசூரியன் சின்னமா என்ற முடிவை, வைகோ அறிவிப்பார். ம.தி.மு.க., கடந்த 9 ஆண்டுகளாக, தி.மு.க., கூட்டணியில் உள்ளது; நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. தொகுதி பங்கீட்டில், எவ்வித கால தாமதமும் இல்லை. தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. கூடுதல் கட்சிகள் சேர்வது, கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும்.

தற்போது, தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜ., நுழையக் கூடாது என்ற அடிப்படையில், தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராகி விட்டோம். ம.தி.மு.க., நலனை விட, தமிழகத்தின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், பொது நோக்கில் செயல்படுகிறோம். எங்களை பொறுத்தவரை, தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வால் எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

ஒன்றில் தனிச்சின்னம்

”தி.மு.க., வழங்கும் 4 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேசமயம், கட்சிக்கு அங்கீகாரமும் பெற வேண்டும். தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெறவும், பதிவு செய்யப்பட்ட கட்சி என்ற நிலை ரத்தாகி விடாமல் இருக்கவும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்; மீதமுள்ள 3 தொகுதிகளில், தி.மு.க.,வின் சின்னத்தில் போட்டியிடுவோம்” என, உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.

Source link