புதுடில்லி: அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா பெயர் மாற்றம் செய்ததற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா அவ்வப்போது சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2020ல், லடாக்கை ஒட்டிய கல்வான் பள்ளத்தாக்கு அருகே அத்துமீறிய சீன வீரர்கள் மீது இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் எழுந்தது. பல கட்ட பேச்சைத் தொடர்ந்து, இரு தரப்பு உறவிலும் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளுக்கு, தனிச்சையாக வேறு பெயர்களை சீனா சூட்டியுள்ளது.
இது குறித்து நம் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியதாவது:
நமக்கு சொந்தமான அருணாச்சலின் சில பகுதிகளுக்கு சீனா போலியான பெயர்களை சூட்டியுள்ளது. இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம்.
அதை சீனா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சீனாவின் மலிவான முயற்சிகளால் இந்திய எல்லைகளை மாற்ற முடியாது.
சீனாவின் இந்த செயல் இரு நாடுகளுக்கு இடையே உறவுகளை சீர்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.
இரு தரப்பு உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான நடவடிக்கைகளை சீனா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
