கோவை: கோவை மாவட்டத்தின் ஒரு பகுதி நுழைவு வாயிலாக அமைந்துள்ளது சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி. சூலூர், இருகூர், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி, மோப்பிரிபாளையம், பள்ளபாளையம், சுல்தான்பேட்டை, செஞ்சேரிமலை ஆகிய பகுதிகளை கொண்டது. மத்திய அரசின் சூலூர் விமானப்படைத்தள பணிமனை தேசிய அடையாளம் என்றாலும், விவசாயத்தையும், விசைத்தறியையும் பிரதானமாக கொண்ட பகுதி.
கடந்த 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலின்போது சூலூர், திருப்பூர் தொகுதியின் கீழ் இருந்தது. 1957-ம் ஆண்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் சூலூர் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டது. 1957, 1962-ம் ஆண்டுகளில் தேர்தல் களை சந்தித்த நிலையில், 1967-ம் ஆண்டு முதல் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் சூலூர் சேர்க்கப்பட்டது.
பின்னர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, மீண்டும் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் கவுண்டர், நாயுடு, அருந்ததியர், தேவர், செட்டியார் சமுதாய மக்கள் கணிசமாக வசிக்கிறார்கள். கோவை மாவட்டத்தில் அதிமுக தொடர் வெற்றியை தக்க வைக்கும் தொகுதி என்பது பெரும்பலம்.
