சென்னை: பெண் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், நிறுவன தலைவர்களை ஒருங்கிணைக்கும் ‘மேஜிக் பெண்கள்’ நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. ‘மேஜிக் 20 தமிழ்’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
பெண்கள் தொடர்பான கருத்தரங்கு, விவாத நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன. மேஜிக் 20 தமிழ் அமைப்பின் இணை நிறுவனர் வாசு கார்த்தி, கூறியதாவது:
பெண்களுக்கு பல்வேறு துறைகள் சார்ந்த புரிதலை மேம்படுத்திக்கொள்ள உதவுவதும் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேற ஊக்குவிக்கவும் செயல்பட்டு வருகிறோம். 3 வது ஆண்டாக மேஜிக் பெண்கள் நிகழ்ச்சி தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதுதவிர மகளிர் தொழில்முனைவோருக்கான பயிற்சிகள், வணிக பாட்காஸ்ட் ஆகியவையும் நடத்தப்பட்டுவருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெல்த் கம்பெனி ஏ.எம்.சி., நிறுவனத்தின் தலைவர் மது லுனாவத் பேசியதாவது:
அசாம் மாநிலத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். வீட்டின் முதல் சி.ஏ., பட்டதாரி நான்தான். இன்போசிஸ் உட்பட மூன்று நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு சொந்த நிதிச்சேவை நிறுவனத்தை துவக்கினேன்.
கடந்த 2022ல் சொத்து மேலாண்மை நிறுவனத்தை துவக்கினேன். வெறும் 25,000 ரூபாயில் துவங்கிய பயணம், தற்போது 12,000 கோடி ரூபாயை நிர்வகிக்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது. இத்துறையில் நாட்டின் முதல் பெண் நிறுவனர் என்ற பெயரை அடைந்தேன்.
பெண் தொழில் முனைவோர், சொந்த முதலீட்டில் ரிஸ்க் எடுத்து தொழில் துவங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
