சென்னை : ''அடுத்து அமையும் தி.மு.க., ஆட்சியில், 'சீனியாரிட்டி' என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்; மூத்தவர்

சென்னை : ”அடுத்து அமையும் தி.மு.க., ஆட்சியில், ‘சீனியாரிட்டி’ என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்; மூத்தவர் என்ற தகுதியெல்லாம் இனி பொருந்தாது. அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்பதை, அழுத்தம் திருத்தமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்,” என, மாவட்டச் செயலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது. அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தல் பணியில், ‘நம்பர் 1’ ஆக தி.மு.க., இருந்து வருகிறது. அரசியல் களத்தில் தி.மு.க.,வின் கை ஓங்கியே இருக்கிறது. பொது மக்களுக்கு வழங்கிய நலத் திட்டங்களால், அவர்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கான ஆதரவு பெருமளவு கூடியுள்ளது.


கவனம்

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்க நினைத்தவர்களின் சதியை முறியடித்து, புதிய கட்சிகளை அரவணைத்து, மிக பலமான கூட்டணியை கட்டியிருக்கிறோம்.

கூட்டணி வலிமை, நலத் திட்டங்கள், ஐந்தாண்டு சாதனைகள் உள்ளிட்டவற்றால், தி.மு.க., தான் வெல்லும் என்ற எண்ணத்தை, பொது மக்களிடமின்றி, எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்.

மாவட்டச் செயலர்கள் ஒவ்வொருவரும் அதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு அசைவும், பேச்சும், தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

வெற்றியை நெருங்கி உள்ளோம். இந்த நேரத்தில் தான் நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து, 200 தொகுதிகள் வெல்வது இலக்கு என்பதை எண்ணி பணியாற்ற வேண்டும். தேர்தல் முடியும் வரை, எந்த உட்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது.

தனிப்பட்ட மனஸ்தாபங்கள், கட்சியின் வெற்றியை பாதிப்பதை எப்போதும் அனுமதிக்க முடியாது.

யாராவது தேவையின்றி கட்சிக்குள் குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி, அது என் காதுகளுக்கு வந்தால், அவர் எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும், உடனே நடவடிக்கை பாயும் என எச்சரிக்கிறேன்.

தனிப்பட்ட நிர்வாகிகளை விட, கட்சியின் நலன் தான் எனக்கு முக்கியம். தேர்தல் நடக்கும் காலகட்டத்திலேயே நடவடிக்கை பாயும்.


இரண்டாம்பட்சம்

தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கின்றன. நம் தொகுதிகளில் நடப்பது, தலைவருக்கு தெரியவா போகுது என்ற நினைப்பில் இருக்க வேண்டாம். இந்த ஸ்டாலினுக்கு இரண்டு கண்கள் மட்டுமல்ல; 234 தொகுதிகளிலும் கண்ணும், காதும் இருக்கிறது.

அத்தனை தகவலும் எனக்கு தனிப்பட்ட முறையில் வந்து விடும்; இப்பவும் வந்து கொண்டு தான் இருக்கிறது.

மாவட்டச் செயலர்கள் வசமுள்ள அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, மாவட்டச் செயலர்களும் வெற்றி பெற்றதற்கு சமம். அடுத்த முறை அமையுள்ள தி.மு.க., ஆட்சியில், ‘சீனியாரிட்டி’ என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். மூத்தவர் என்ற தகுதி எல்லாம் இனி பொருந்தாது.

அமைச்சர் பதவி என்பது, அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே என்பதை, அழுத்தம் திருத்தமாக இப்போதே மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல மண்டல பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலர்கள், கட்சியின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று தான் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதே தவிர, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பவர்கள் அல்ல என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

உழைப்பவர்களுக்கு பரிசு

வேட்பாளர் தேர்வு, யாருக்கு எந்த தொகுதியை ஒதுக்க வேண்டும் என அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். அவரை பிடித்தால், ‘சீட்’ கிடைக்கும்; இவரை பிடித்தால் சீட் கிடைக்கும் என, நேரத்தையும், உழைப்பையும் யாரும் வீணாக்க வேண்டாம்.

மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே இம்முறை சீட். வெற்றி வாய்ப்புள்ள, உறுதியாக வெற்றி பெறும் ஆற்றல் உள்ளவர்களுக்கு மட்டுமே சீட். கட்சியின் அத்தனை நிர்வாகிகள் பற்றிய தகவலும் உடனுக்குடன், என் மேஜைக்கு வந்து கொண்டே இருக்கும்.

போட்டியிடும் 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர். தான் மட்டுமின்றி, பிறரையும் வெற்றி பெற வைத்து, கட்சியின் வெற்றிக்கு உழைப்பவர்களுக்கு உண்டான பரிசு, தேர்தலுக்கு பின் தேடி வரும். இவ்வாறு அவர் பேசினார்.

நான் வந்துட்டேன்யா: துரைமுருகன் உற்சாகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சிகிச்சைக்கு பின், வீட்டில் ஓய்வில் இருந்து வந்த தி.மு.க., பொதுச்செயலரும், அமைச்சருமான துரைமுருகன், அறிவாலயத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களை பார்த்து கையசைத்து, ”நான் வந்துட்டேன்யா… தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது,” என்றார். மண்டல பொறுப்பாளர்கள் எட்டு பேருக்கும், மாவட்டச் செயலர்கள் ஐந்து பேருக்கு மட்டுமே, இக்கூட்டத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி, மாவட்டச் செயலர் களுடன் அமர்ந்திருந்தார். ‘தேர்தல் களம் பணிகளில் வேகமாக செயல்பட வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உள்ளடி வேலையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்’ என, மாவட்டச் செயலர்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில் கனிமொழி போட்டி?

துாத்துக்குடி எம்.பி.,யாக இருக்கும் தி.மு.க., துணை பொதுச் செயலர்
கனிமொழி, மாநில அரசியலில் ஈடுபட வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள்
வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே, தி.மு.க.,வில் விருப்ப மனு
பெற்றபோது, கனிமொழி பெயரில், தலா 25,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, 30 பேர்
விருப்ப மனு அளித்துள்ளனர்.

அதன்படி, திருச்செந்துார்,
பாளையங்கோட்டை, நாங்குநேரி, அம்பாசமுத்திரம், தென்காசி, மயிலாப்பூர்,
திருவொற்றியூர், ராயபுரம், திருவாரூர், தஞ்சாவூர் என 10க்கும் மேற்பட்ட
சட்டசபை தொகுதிகளில், கனிமொழி போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப
மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது
பற்றி கனிமொழியிடம் கேட்டபோது, ‘எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை’
என்றார். இந்நிலையில், தி.மு.க.,வில் விருப்ப மனு அளித்தவர்களிடம், இன்று
முதல் 22ம் தேதி வரை நேர்காணல் நடப்பதால், நேர்காணலில் கனிமொழி பங்கேற்பாரா
என்ற எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source link