சென்னை: அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள்

சென்னை: அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவியருக்கு பாலியல் தொல்லை தொடரும் கொடூரம் அம்பலமாகியுள்ளது. தொல்லை கொடுத்ததாக, பல்கலை பேராசிரியர் ஞானவேல்பாபுவை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், ‘யார் அந்த சார்’ என்ற கேள்வியால், மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர், 2024ம் ஆண்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், முக்கியமான ஒருவரை தி.மு.க., அரசு காப்பாற்ற முயன்றதாக குற்றம் சாட்டிய எதிர்கட்சிகள், ‘யார் அந்த சார்’ என கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையானது. இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட தி.மு.க.,வைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு, 30 ஆண்டுகளுக்கு குறையாத, ஆயுள் தண்டனை வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம், பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘பேராசிரியர் ஞானவேல்பாபு என்பவர், தனக்கும், பல மாணவியருக்கும், நேரடியாகவும், தொலைபேசி வாயிலாகவும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்’ என, தெரிவித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் மகளிர் போலீசார், பேராசிரியர் ஞானவேல்பாபு மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

இந்தசூழலில், பேராசிரியர் ஞானவேல்பாபு மீது, உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, மாணவர் அமைப்பினர் நேற்று, அண்ணா பல்கலை வளாகம் முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், மாணவியின் பாலியல் தொந்தரவு புகாரை தொடர்ந்து, அண்ணா பல்கலை, தொழில்துறை இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஞானவேல் பாபுவை, ‘சஸ்பெண்ட்’ செய்து, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது.

புகார் தொடர்பாக, அண்ணா பல்கலையும் துறை ரீதியிலான விசாரணையை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணையில், பேராசிரியர் ஞானவேல்பாபு, 50, படிப்புக்காக பொருளாதார ரீதியாக நெருக்கடியை சந்திக்கும் மாணவியருக்கு உதவிகள் செய்வது போல, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பேராசிரியர் ஞானவேல்பாபுவை, சென்னை மாநகர போலீசார், நேற்று கைது செய்தனர். அவரை, சென்னைக்கு அழைத்து வந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஞானவேல்பாபு, தற்போது, கோட்டூர்புரத்தில், அண்ணா பல்கலை பேராசிரியர் குடியிருப்பில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

கடந்த, 1998ம் ஆண்டில், சென்னை பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின், திருச்சி என்.ஐ.டி.,யில், எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., படிப்பை முடித்துள்ளார். இவருக்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேலும் பல மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக, ஞானவேல்பாபு மீது போலீசில் புகார்கள் குவிகின்றன.

கடந்த முறை பாலியல் புகாரில் சிக்கியவர்களை தி.மு.க., அரசு காப்பாற்றியது. அப்போது எழுந்த, ‘யார் அந்த சார்’ என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை என, அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீண்டும் சர்ச்சையை துவக்கியுள்ளன.

பாலியல் தொல்லை தடுப்பு குழு செயல்படுதா?

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை: அண்ணா பல்கலையில் மாணவியருக்கு, இரண்டு ஆண்டுகளாக பேராசிரியர் ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, மாணவி ஒருவர் அளித்துள்ள புகார் அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள மாணவியரிடம், பாதுகாப்பான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என, அவர் கேட்டுள்ளார்.
மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டிய கல்வி நிறுவனங்களிலேயே, தொடர்ந்து இத்தகைய சம்பவங்கள் நடப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பல்கலை வளாகத்தில் உள்ள, பாலியல் தொல்லை தடுப்பு மற்றும் புகார் விசாரணை குழு உண்மையில் செயல்பாட்டில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக, முழு விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டிய பொறுப்பு, காவல் துறைக்கு உள்ளது.
அனைவரிடமும் ரகசியமாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அண்ணா பல்கலை மாணவி, பாலியல் தாக்குதலுக்கு உள்ளான வழக்கில் காவல் துறை செய்த தவறுகளை, மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் பாலியல் புகார் என்பது வெட்கக்கேடு

அ.தி.மு.க., வெளியிட்ட அறிக்கை: கடந்த 2024 டிசம்பரில் அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கில், ‘யார் அந்த சார்?’ என்று, அ.தி.மு.க., நீதி கேட்டது நாடு முழுதும் எதிரொலித்தது. தி.மு.க., அரசு, எந்த சாரை காக்க நினைத்ததோ, அக்கேள்விக்கான பதில் இன்றளவும் மர்மமாகவே உள்ளது. ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகாவது, அண்ணா பல்கலை நிர்வாகம், மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும்.
தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அதே அண்ணா பல்கலை வளாகத்தில் இருந்து, மற்றொரு மாணவியிடம் இருந்து புகார் என்ற செய்தி வெட்கக்கேடு. இப்படிப்பட்ட வழக்குகளை முறையாக விசாரிக்க வேண்டும். மாணவியின் விபரங்களோடு முதல் தகவல அறிக்கையை கசியவிட்ட தி.மு.க., அரசு போல் அல்லாமல், காவல்துறை உரிய நெறிமுறையோடு இவ்வழக்கை அணுகி, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க., அரசு அமைந்ததும், ‘அந்த சார் யார்’ என்பதைக் கண்டறிந்து கூண்டில் ஏற்றப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link