சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், 100 நாள் வேலை திட்டத்தை

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:

கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், 100 நாள் வேலை திட்டத்தை நம்பியே வாழ்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு, குறித்த நேரத்தில் ஊதியம் வழங்கப்பட்டது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, ‘இத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்; பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்; சம்பளம் 300 ரூபாயாக உயர்த்தப்படும்’ என தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக, கடந்த 57 மாத தி.மு.க., ஆட்சியில், ஆண்டுக்கு சராசரியாக 40 நாட்கள் கூட வேலை வழங்கவில்லை; குறித்த நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை என மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

இத்திட்டத்தில் தி.மு.க.,வினர் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை, 125 நாட்களாக உயர்த்தியதுடன், பணியாளர்களுக்கு நன்மை தரும் வகையில் பல மாறுதல்களை செய்துள்ளது.

புதிய சட்டத்தில், மாநில அதிகாரம் குறைக்கப்படவில்லை. 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்குமாறு கூறப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் குளங்கள், சாலைகள், நீர்நிலைகள், சந்தைகள் போன்றவை மாநில அரசுக்குத்தான் சொந்தம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது, தி.மு.க.,வினரின் முறைகேடுகளுக்கு இடையூறாக இருக்கிறது என்பதால், 100 நாள் வேலை திட்டத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தி.மு.க., அரசு ஈடுபட்டுள்ளது.

இதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், தமிழகம் முழுதும் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன், வரும் 13ம் தேதி காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link