சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் நேற்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் நேற்று தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். கூட்டணியில் தே.மு.தி.க.,வை சேர்ப்பது குறித்து, இரு தரப்பும் விவாதித்துள்ளதாக தெரிகிறது.

கூட்டணியில், 40 தொகுதிகளை, பா.ஜ., கேட்கிறது. தொகுதிகளை குறைக்க விரும்பும் பழனிசாமி, பேச்சுவார்த்தையை தள்ளிப்போட்டு வருகிறார்.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர், சென்னை பசுமை வழி சாலை வீட்டில், பழனிசாமியை சந்தித்தனர். இரவு 7:15 மணிக்கு துவங்கிய பேச்சு, இரவு 8:25 மணி வரை நடந்தது.

இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

சட்டசபை தேர்தலில் பா.ஜ., போட்டியிட விரும்பும், 58 தொகுதிகள் பட்டியலை, ஏற்கனவே பழனிசாமியிடம் கொடுத்து விட்டோம். அதை இறுதி செய்வதற்காக தான், இந்த சந்திப்பு நடந்தது. அதன்படி, பா.ஜ.,வுக்கு 35 முதல் 40 தொகுதிகளை, அ.தி.மு.க., ஒதுக்க வாய்ப்பு உள்ளது.

அடுத்தடுத்த பேச்சில், தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும். அதேபோல, தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு அழைத்து வர பேச்சு நடக்கிறது.

அவர்கள் கேட்கும், ராஜ்யசபா எம்.பி., ‘சீட்’ குறித்து, பழனிசாமியிடம் பேசப்பட்டது. தே.மு.தி.க.,வை அழைத்து வரும் பொறுப்பை, அ.தி.மு.க., ஏற்றுள்ளது.

அதன்படியே, கோவையில் நேற்று முன்தினம் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும் சந்தித்து பேசியுள்ளனர். அதன் பின், இருவரும் ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் பங்கேற்றனர்.

பழனிசாமியுடனான நயினார் சந்திப்பில், அ.தி.மு.க., – அ.ம.மு.க., நிர்வாகிகள் இன்னும் இணைந்து செயல்படாமல் இருப்பது குறித்தும், மார்ச் 1ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்தும் பேசப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link