சென்னை: ”இபிஎஸ் போல, தரையில் தவழ்ந்து சென்ற அனுபவம் எனக்கு கிடையாது,” என, துணை முதல்வர் உதயநிதி விமர்சித்தார்.
சென்னையில் வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து, துணை முதல்வர் உதயநிதி, பிரசாரம் செய்தார். அப்போது, உதயநிதி பேசியதாவது: சென்னையில் நான் போட்டியிடும் தொகுதி வெற்றியை விட, கார்த்திக் போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதி வெற்றி எனக்கு மிக முக்கியம். அவரை வெற்றி பெற செய்தால், ‘ஹைடெக்’ தொகுதியாக வில்லிவாக்கத்தை மாற்றுவார்.
கடந்த தேர்தலில் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்லுாரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப் வழங்கப்படது; 1.37 கோடி பேருக்கு மகளிர் உதவித்தொகை திட்டம் வழங்கப்படுகிறது. சென்னை மக்கள் கஷ்டப்படும்போது, பிரதமர் மோடி எந்த உதவியும் செய்யவில்லை. நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் சென்னையை, மத்திய அரசு பழிவாங்குகிறது.
மோடியின் முரட்டு அடிமையாக அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் இருக்கிறார். இபிஎஸ் போல, தரையில் தவழ்ந்து சென்ற அனுபவம் எனக்கு கிடையாது. காலில் விழுவது தப்பில்லை; தான் விழுந்த காலை வாரி விடுவது தான் தப்பு. நான் உயிரை வாங்குவதாக பேசுகிறார். நீங்கள் நன்றாக வாழ்ந்து, அ.தி.மு.க.,வின் நிரந்தர பொதுச்செயலராக இருக்க வேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு உதயநிதி பேசினார்.
