சென்னை: ”உலகிலேயே கடினமான யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் அனைவருக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை அல்ல” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தது. திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் இதை உடனடியாக சரி செய்ய முயற்சிகளை மேற்கொண்டோம். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.
மகிழ்ச்சி
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகியுள்ள 60 பேரில் 56 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயன்பெற்றவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த எண்ணிக்கை மேலும் கூட வேண்டும். தமிழகத்தில் இருந்து பல இளைஞர்கள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சென்று எளிய மக்களுக்காக பணியாற்ற வேண்டும். நாடுகளுக்கு இடையிலான உறவையும் மேம்படுத்த வேண்டும்.
கடினமான தேர்வு
குடிமைப்பணி தேர்வில் கடுமையான உழைப்பை கொடுத்து வெற்றி பெற்றுள்ள உங்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். நீங்கள் படைத்திருப்பது சாதாரண சாதனை அல்ல; உலகளவில் மிகவும் கடினமான தேர்வு யுபிஎஸ்சி. தேர்வுக்கு தயாராகவே மன வலிமை, ஒழுக்கத்தை சோதித்துப் பார்க்கும் அளவு கடுமையானது.
நிறைவேற்றுங்கள்
உங்கள் கனவு நிறைவேறிவிட்டது. இனி மக்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு போனாவது செய்து அப்பா, அம்மாவிடம் நலம் விசாரியுங்கள். இந்த அக்கறையும், அன்பும்தான் உங்களுடைய Career முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் நடந்த அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
