சென்னை: காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட முயன்ற கிராம உதவியாளர்களை, போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்களுக்கு, ‘டி கிரேடு’ அடிப்படையில், காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பிப்., 5 முதல் தமிழகம் முழுதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், 35வது நாளான நேற்று, சென்னை எழிலகம் வளாகத்தில், 800க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ‘இங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை’ என்றனர்.
இதனால், இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதை தொடர்ந்து, கிராம உதவியாளர்களை கைது செய்த போலீசார், மாலையில் விடுவித்தனர்.
மின் வாரிய பணியாளர்கள் தமிழக மின் வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர், பதவி உயர்வு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலை மின் வாரிய தலைமை அலுவலகம் அருகே, நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இது குறித்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: மின் வாரியத்தில், மின் கம்பம் நடுவதற்கு, பள்ளம் தோண்டவும், கம்பம் நடவும், கிடங்குகளில் இருந்து, தளவாடங்களை அனுப்பும் பணிக்கும், 2021ல், கேங்மேன் பதவியில், 9,613 பேர் நியமிக்கப்பட்டனர். களப்பிரிவில், 30,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதனால், மின் சாதன பழுதை சரி செய்தல் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளுக்கு, கேங்மேன் பணியாளர்களை ஈடுபடுத்துகின்றனர்.
ஆனால், கேங்மேன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடையாது. அவர்களுக்கு கள உதவியாளர்களாக, பதவி உயர்வு வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப, ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
